‘வெங்காயம்’ ரிசல்ட் - கலக்கத்தில் சேரன்!




ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் வெங்காயம். புதுமுகங்களே முழுக்க முழுக்க படத்தில் இருந்தாலும் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. பார்த்தவர்கள் பாராட்டினாலும் படம் ஓடினால்தானே சந்தோஷம். ஆனால் படமோ வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியது. காரணம் படத்திற்கு சரியான பப்ளிசிட்டி இல்லாததுதான். குறை சொல்ல முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தைப் பார்த்து அதிசயித்துப் போனவர் இயக்குநர் சேரன். இது போன்ற நல்ல படங்கள் ரசிகர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்று நினைத்த சேரன் இந்த படத்தை கொஞ்சம் விளம்பரப்படுத்தி ரீ ரிலீஸ் செய்தார். சேரனே இதை செய்வதால் இந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, தியேட்டரில் கூட்டமே இல்லையாம். முன்பு வெங்காயம் என்ற பெயரில் இந்த படம் ரிலீஸ் ஆன போது இருந்ததை விட கூட நாலு பேர் அதிகமாக உட்கார்ந்து இந்த படத்தைப் பார்க்கிறார்களாம். சொந்தப் பணத்தைப் போட்டு சேரன் இந்த படத்தை ரிலீஸ் செய்ததால் செலவு செய்த பணம் சேரனின் கையைக் கடிக்கும் என்றே தெரிகிறது. ஆனாலும் ஒரு நல்ல முயற்சியைச் செய்தார் சேரன் என்பதற்காக நிச்சயம் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராஜ்குமார் முதலிலேயே இவ்வளவு பப்ளிசிட்டியுடன் களம் இறக்கியிருந்தால் படம் நிச்சயம் வசூலையும் வாரிக் குவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெங்காயம் ஏற்படுத்திய காயம் பற்றிய விவரம் தெரியாமலே ஆரண்ய காண்டம், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களையும் ரீ ரிலீஸ் செய்யத் தயாராகி வருகிறார்களாம் படத்தின் தயாரிப்பாளர்கள்.
hotlinksin

0 Responses to “‘வெங்காயம்’ ரிசல்ட் - கலக்கத்தில் சேரன்!”

Post a Comment