இங்கே யாருக்கும் வெட்கமில்லை…!




துடிதுடித்தபடி உள்ள ஒருவனைப் பார்த்து விட்டு கடந்து போகாதே! அவனுக்கு உதவு என்கிறது வைணவம்.

நீ லாபம் சம்பாதித்து ஈட்டிய பொருளில் உன் அருகில் வாழும் ஏழையின் பங்கும் உள்ளது அவனுக்குப் பகிர்ந்து கொடு என ஜக்காத்தை ஒரு சமூக சட்டமாகவே ஆக்கியுள்ளது இஸ்லாம்.

ஏழைகள் இருக்கும் இடத்தில் நானிருப்பேன் இயேசு பிரான். இப்படி சமயம்தோறும் நன்னெறி ஊட்டப்பட்டு, அதனை விளங்காமல் சமூகம் துப்பி விட்டதோ என்ற எண்ணம் தான் தற்போது மேலோங்கி நிற்கின்றது. ஏனெனில்,

சமயங்கள் எனும் அன்னை தன் பிள்ளைகளுக்கு அமுதூட்ட அன்பை மட்டுமே காட்டி சோறூட்டியதால் துப்பிவிட்ட குழந்தைகளாய் சமூகம் உள்ளது. அதட்டல், உருட்டல், பூச்சாண்டியைக் காட்டி இருந்தால் ஒருவேளை விழுங்கி இருப்பார்களோ என்னவோ?

உணவு ஊட்டச்சத்து குறைபாடு ஏன் ஏற்பட்டது. நோஞ்சான்கள் ஏன் பெருகி விட்டனர். குழந்தைகள் மட்டுமா? நோஞ்சான் பெண்கள், ஆண்கள் என குறிப்பிட்ட அளவுக்கு ஊட்டக் குறைபாடுள்ளவர்கள் இருப்பதால்தானே கிராமம் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்கப்படுகிறது.

இதில் பெருமையாகப் பலரும் எங்கள் ஆட்சியில்தான் மருத்துவ வசதிகளை விரிவாக்க அதிக அளவு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கினோம் என்கின்றனர் வெட்கமில்லாதவர்கள்! நல்ல உணவு, நல்ல சூழல், போதிய வருவாய் இருந்தால் நோய் ஏன் வருகிறது உடல் நலம் தான் கெடுமா? இதை இந்த கோணத்தில் யார்தான் சிந்திப்பது?

ஊட்டச்சத்து குறைபாடு உணவில் மட்டுமா உள்ளது? எல்லாவற்றிலும் தானே உள்ளது MAL ADMINISRATION என்ற மோசமான நிர்வாகச் சூழலுக்குள் தானே பல சமயக் கருத்தை அறிந்த பல சமூகத்தவர்களும் அதிகாரப் பொறுப்பில் உள்ளனர்? இவர்களால் தானே MAL PRACTICE கள் பெருகி நிர்வாகக் கோளாறுகள் ஊழல்கள் ஏற்பட்டு சமூகத்தின் அனைத்திலும் சட்டதிட்டங்களில் MAL NUTRITION குறைபாடு ஏற்பட்டுள்ளது. உணவில் மட்டுமல்ல குறைபாடு சகலத்திலும் சத்துக் குறைபாடு நிலவத்தானே செய்கிறது.

விடுதலை பெற்று 12 ஐந்தாண்டு திட்டங்கள் போடப்பட்டுள்ளன. ஏகப்பட்ட நிதிகள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன் பலன் முழுமையாக மக்களுக்கு கிடைத்ததா? சத்துக் குறைவான சோற்றை விருந்தாகப் போட்டது போல்தானே திடடங்கள் இருந்தன இதன் சத்தை, சாரத்தை ஊட்டத்தை மட்டும் உறிஞ்சியது யார்?

சமூக நீதி நிலவ வேண்டும் என்பதற்குத்தானே சாசனச்சட்டம் உருவானது. அந்தச் சாசனத்தின் ஊட்டமிக்க சாரங்கள் நீக்கப்பட்டு சக்கைதானே நடைமுறையாகிறது. அதனால்தானே சாசனச்சட்டம் தங்களுக்கு முறையாக வேண்டும் என்று நீதிமன்ற வாசலுக்குச் சென்று முறையீடுகள் செய்யப்படுகிறது. லட்சக்கணக்கான வழக்குகள் நீதி மன்றத்தில் தேங்குவதற்கு என்ன காரணம்? சட்டத்தின் ஆட்சி என்கிற  சத்துக்கள் இல்லாமை தானே?

ஜனநாயக மக்களாட்சியில் சாசனச்சட்டமும் வழிகாட்டும் நெறிகள் தானே ஊட்டச்சத்து. இந்த ஊட்டச் சத்துக் குறைந்தால் மக்களாட்சியே நோஞ்சானாகவே தான் மாறும் எப்படி வலுவோடு விளங்கும் இதுதானே நிஜமான தேசிய அவமானம்!

எங்கு பார்த்தாலும் முறைகேடுகள். லஞ்சங்கள், ஊழல்கள் இதைத் தடுக்க லோக்பால்கள். அதை விவாதிக்க ஆயிரம் தடங்கல்கள் ஏன்? ஒட்டுமொத்த ஊட்டச்சத்தை வலுவான பொருளாதாரத்தை உறிஞ்சும் ஆக்டோபஸ் உறிஞ்சிக் கண்கள் நிறுவனங்களாக, விலங்குகளாக, மாஃபியாக்களாக மாறிப்போனதால் அவர்களின் கண் அசைவுக்கு ஏற்ப ஆடும் நிர்வாகங்களால் MAL   ADMINISTRATION  ஏற்பட்டு தாராள கொள்கையாக   MAL  PRACTICE வளர்ந்து விட்டதால் தானே MAL NUTRITIONஅதிகரித்தது.
உணவில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய சரிவிகித விதிகளும், சட்டங்களும் குறைந்து நாடே நோஞ்சானாக மாறிவிட்டது! அதனால்தான் பிரதமரே தன்னை அறியாமல் தேசிய அவமானம் என ஒப்புதல் வாக்கு மூலம் தந்தாரோ!!

கிழக்குக் கடலோர மாநிலங்களில் வயிற்றுப் பாட்டுக்கு ஏழைகள் படும்பாடு சொல்லில் வடிக்க இயலாது. மாங்கொட்டைப் பருப்புக் கஞ்சி, கிழங்குகளைத் தேடி காட்டில் அலைவது போலவே மேற்குக் கடற்கரைப் பக்கமும் விவசாயிகள் வறுமைச் சாவு, கடன் சாவு,  நோஞ்சான் குழந்தை, நாட்டின் நடுப்பகுதி கிராமங்கள் வறட்சி காரணமாக மூன்று வேளை முறையான உணவுக்கு அலையும் ஏழைகள். மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் வறுமைச் சூழல், இன்னொரு பக்கம் பங்கு வணிகத்தில் வரலாறு காணாத புள்ளி விலை ஏற்றம்! என்னே முரண்பாடு.

உணவு தானிய விலை ஏற்றம்! வணிகத்தில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு லாபம் அதிகம்! உழைக்கும் ஆலைத் தொழிலாளிகள் சம்பளப் பேச்சு வார்த்தை தோல்வி, உற்பத்தி இலக்கை தொட்டு விட்டதாக வர்த்தக கழகங்கள் பெருமிதம். ஒரேநாடு ஒரே மக்கள் இருவேறு வர்கங்கள். இந்த முரண்பாடுகளைத்தான் சுதந்திரம் பரிசாகத் தந்துள்ளது போலும். அதனால் தான் ஊட்டம் குறைந்து விட்டது.

32 ரூபாய் சம்பாதிப்பவர் வருவாய் ஈட்டுபவர்! 31 ரூபாய் சம்பாதிப்பவர் வறுமைக்கோட்டுக்கு உள்ளே இருப்பவர் நல்லதொரு பொருளாதார திட்டமிடல் சடுகுடு ஆட்ட நடுவர்களாய் மத்திய திட்டக் குழு உறுப்பினர்கள்.

ஐ. மு. கூ. வின் முதல் கட்ட கூட்டணியில் காதலர்களாய் காங்கிரசுடன் உறவாடிய கம்யூனிஸ்டுகள் சுட்டிக் காட்டிய வேலைத் திட்டம் தான் உணவுக்குப் பாதுகாப்பு, வேலைக்கு உத்தரவாதம் என்பது. இதை காதலர்கள் கழண்ட பின்னரும் அவர்கள் சொன்னதை இப்போது செய்ய முயற்சிகள். இதற்கும் எதிர்ப்புகள். இன்னொரு புறம் உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட பன்னாட்டு நிறுவன அனுமதிகள் முயற்சிகள், தோல்விகள்.

மொத்தத்தில் எல்லாவற்றிலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இடுப்பில் ஆடை கட்டவும் வலுவில்லாமல் வெட்கமறியாமல் நிர்வாணமாக தேசம்!

சோமாலியாவின் உணவுப் பஞ்சம் போலவே. நிர்வாக ஊட்டங் குறைந்த நோஞ்சான்களிடம் நாடே சிக்கித் தவிக்கிறது. இத்தனைக் குடியரசு கன்டபின்னரும். நாம் கன்ட பலன் இதுதான். வாழ்க நம் ஜனநாயகம்.
hotlinksin

0 Responses to “இங்கே யாருக்கும் வெட்கமில்லை…!”

Post a Comment