விநாயகா வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லாத படம் - விமர்சனம்



பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்த விளம்பரமும் இல்ல. தினசரியில் மட்டும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள் அதுவும் விளம்பரத்தில தொப்பை வயிறோட ஒருத்தர் நிக்கிற மாதிரி. அதனாலதான் படத்துக்கு விநாயகான்னு பேரு வெச்சிருப்பாங்க போல. இந்த தொப்பை ஆசாமிதான் ஹீரோவா அட வௌங்குச்சு போங்க என்றுதான் படம் பார்க்க போகும்வரை நினைத்திருந்தேன். ஆனால் படத்திற்கு இளம் கதாநாயகர்களின் படங்களுக்கு வருவது போன்ற கூட்டம் வந்திருதது. ஒருவேளை இவர்கள் சந்தானத்துக்காக வந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் சந்தானத்துக்காக வந்தவர்கள் சந்தானத்தை திரையில் பார்த்ததும் கைத்தட்டியிருக்க வேண்டுமே... அதுவும் இல்லை. பின்புதான் புரிந்தது வந்திருந்தவர்கள் எல்லோரும் படத்தில் ஏதோ இருக்கிறது என்ன எண்ணத்தில்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தை நன்றாகவே நிறைவேற்றி அனுப்புகிறது விநாயகா.

இனி படத்தின் கதைக்குப் போவோம்.

வேலை கிடைத்து சென்னைக்கு வருகிறார் கார்த்திக். பெசன்ட் நகரில் இருக்கும் தன் அக்கா வீட்டில் தங்குகிறார். பார்ப்பதற்கு பீம் பாய்ன்னு சொல்லுவோமே அந்த மாதிரி இருக்கிறார் கார்த்திக். இவருடன் இவரது அக்கா கணவரின் தம்பியான சந்தானமும் தங்கியிருக்கிறார். கார்த்திக்குக்கு சென்னையில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் கல்பனாவுக்கு கார்த்திக்கை பிடிக்காமல் போகிறது. பின்பு போகப் போக கார்த்திக்கிடம் தன் மனதை இழக்கிறாள் கல்பனா. இதுக்கு அப்புறமா க்ளைமேக்ஸ்ல என்ன நடக்கும்ங்கிறதை நீங்களே யூகித்துவிடலாம்தான்.

பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும், கார்த்திக் கதாபாத்திரம் அதையெல்லாம் நினைவுக்கு கொண்டுவராமல் செய்துவிடுகிறது. படம் போரடிக்காமல் நகருகிறது. பின்னணி இசை இல்லாமல் திரையில் கேரக்டர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ மேடை நாடகம் ஃபீல் நமக்குத் தோன்றினாலும், அடுத்தடுத்த காட்சிகள் படத்தை இன்னும் டெவலப் செய்து கொண்டு போகின்றன. இடைவேளைக்குப் பிறகு கதாநாயகி பீல் பண்ணுகிற இடங்களில் சில காட்சிகள் ரீபிட்டடு போல் வந்து போகின்றன. 

வெள்ளந்தியான இந்த கேரக்டருக்கு நான்றாகவே பொருந்தியிருக்கிறார் ஹீரோ. இந்த படத்தின் ஹீரோவுக்காக கதை பண்ணினார்களா? இல்லை கதைக்காக இந்த ஹீரோவை தேடிக் கண்டுபிடித்தார்களா என்பது தெரியவில்லை. ஆனால் கார்த்திக் கேரக்டருக்கு அவரை விட்டால் ‘சின்னவனே... பெரியவனே...’ அவங்களை கூப்பிட்டுதான் நடிக்க வைத்தாக வேண்டும். இவர் சந்தானத்துடன் இணைகிற இடங்களில் வெடி சிரிப்புகளுக்கு பஞ்சமில்லை. 

இவருடன் சந்தானம் படுத்திருக்கும் போது மனுஷன் போடுகிற குறட்டைச் சத்தத்துக்கு சந்தானம் நொந்து நூடுல்ஸ் ஆகிறார் என்றால், லிப்டில் சந்தானம் மாட்டிக் கொள்கிற போது அசால்டாக கார்த்திக் வந்து திறந்துவிடுவது குபீர் சிரிப்பு காமெடி. கார்த்திக் கேரக்டரின் சாதாரண பேச்சே பல இடங்களில் நம்மை கைத்தட்டி சிரிக்க ரசிக்க வைக்கின்றன.

சாட்டிங்கில் அறிமுகமான பெண் ஒருத்தி கார்த்திக்கை பார்க்கவேண்டும் என்று ஆசையோடு வந்து இவரது பெரிய தொப்பையைப் பார்த்ததும் தன் பெயரை மாற்றிச் சொல்லி எஸ்கேப் ஆகிறாள். ஆனாலும் அந்த பெண் வந்துவிடுவாள் என்கிற அந்த ஏக்கத்தோடு அவர் வெயிட் பண்ணுகிற காட்சிகள் அருமை. ‘எத்தனையோ பேர் குண்டுன்னு சொன்ன போது கூட நான் வருத்தப்படலை, ஆனா அவ என்னை குண்டுன்னு சொல்லிட்டா...’ என்று ஹீரோ தன் அக்காவிடம் சொல்லி அழுகிற காட்சி செம டச்சிங் சீன்ஸ். அவ்வளவு பெரிய குண்டு மனிதராக இருந்தாலும் தன் மனம் இன்னும் சின்னக் குழந்தை மாதிரிதான் என்று நிரூபிப்பதாக இருக்கிறன, தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் கார்த்திக் எம்பிக் குதிக்கும் காட்சி.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் ‘பையா’ சோனியா. பொண்ணு நடிக்குது என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு செம கேசுவலாக பண்ணிட்டுப் போறாங்க. எந்த காட்சியிலும் அலட்டிக்கிற மாதிரி இல்லாம ரொம்ப ரிலாக்ஸா பண்றாங்க சோனியா. தமிழ் சினிமாவில் சோனியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனா, நம்ம ஆளுங்க இந்த மாதிரி முக வெட்டு பொண்ணுகளை ரசிப்பாங்களாங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான். இவர் தவிரவும் வேறு சில கதாநாயகிகளும் இருக்கிறார்கள். எல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்த முகங்கள்தான்.

சந்தானம் அவருக்கே உரிய ஸ்டைலில் காமெடியில் கலக்கியிருக்கிறார். மேலும் சின்னச் சின்ன கேரக்டர்களில் அற்புதமாக பலரும் பண்ணியிருக்கிறார்கள். அதுவும் அந்த அண்ணி கேரக்டர், அவங்க வாய்ஸ். நச்ன்னு இருக்கு.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் நல்ல படம் பார்த்த திருப்தியில் சந்தோஷமாகவே வெளியே வருகின்றனர். இது ஒன்றே போதும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு.

படத்தை இயக்கியிருக்கிறார் பாலசேகரன். அடிதடி, வெட்டு குத்து, கிளாமர் காட்சிகள், குத்துப்பாட்டு இதெல்லாம் இல்லாமல் படம் எடுத்ததற்காகவே  பாலசேகரனுக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம். ராம் மோகன் ராவ் படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படி ஒரு ஹீரோ என்றாலும் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தைத் தயாரித்த அவருக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள். 
hotlinksin

0 Responses to “விநாயகா வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லாத படம் - விமர்சனம்”

Post a Comment